இறைவனாய் பார்க்காதே
அமைதியாய் இருந்திடு மருத்துவ அலுவலகத்தில்
அதுவே கோயிலுக்கு அடுத்தது இவ்வுலகத்தில்
அனுமதியின்றி வருவது கொடிய நோயே
அலறியோட வைப்பது நம் மருத்துவத் தாயே
ஆபத்தை தருகின்ற நோயினைக் கொன்று
ஆண்டவனாய் நிற்கின்ற மருத்துவம் நன்று
ஆலயத்தில் மந்திரத்தை ஓதும் ஐயர்
ஆண்டவனான மருத்துவத்தை செய்யும் மருத்துவர்
இறைவனின் அருளால் உயிர் பிழைப்பதுண்டு
இறைவனே ஐயர் என புகழ்வதுண்டு
இன்னுயிர் போய்விடின் மருத்துவரை பிடிப்பதுண்டு
இறைவனை விட்டுவிட்டு ஐயரை அடிப்பதுண்டு
ஈரநெஞ்சம் கொண்ட மருத்துவர் மேல்
ஈவு இறக்கம் காட்டுவீர் இனிமேல்
ஈன்ற குழந்தை பிறந்தநாள் முதல் வேண்டும்
ஈமச்சடங்கு வரை மருத்துவம் வேண்டும்
உறவுக்கு உயிர்போனால் உதைக்காதே மருத்துவரை
உணர்ச்சிகளுக்கு வசப்பட்டு செய்யாதே பெருந்தவறை
உயிர்காக்கும் தொழிலுக்கு மரியாதை வழங்கிடு
உண்மையிலேயே தவிறிருந்தால் நீதிகேட்டு வழக்கிடு
ஊரே போற்றிடும் உன்னத தொழில்
ஊக்கத்துடன் செய்திட பெற்றிடும் எழில்
ஊமையும் குருடனும் மறுவாழ்வு பெறுவதுண்டு
ஊழையும் வென்று உயிரைத் தருவதுமுண்டு
எத்தனையோ சாதித்தாலும் பணிவு உண்டு
எமனையே எதிர்க்கின்ற துணிவு உண்டு
என்றும் நிலைத்திடும் நல்ல மருத்துவம்
என்றுமே அழியாது அதன் மகத்துவம்
ஏமாற்றம் தாராத துறையும் உண்டோ?
ஏளனப் படுத்துவதில் நியாயம் உண்டோ?
ஏற்றமும் இரக்கமும் இயற்கை தானே
ஏன் இறங்குகிறாய் வன்முறையில் வீணே
ஐயமில்லை என்பதில்லை என்றும் மருத்துவத்தில்
ஐக்கியம் ஆகிவிடு அதன் தத்துவத்தில்
ஐந்து விரலால் எழுதப்படும் மருந்து
ஐயமில்லை தலைவிதியாய் விளங்கும் சிறந்து
ஒட்டி பிறக்கும் குழந்தைகளைப் பிரிப்பதுண்டு
ஒருசில சமயத்தில் குழந்தை இறப்பதுண்டு
ஒருமருந்தும் அமிர்தம் கிடையாது மனிதனே
ஒத்துக்கொள்ள வேண்டுமே மருத்துவனும் மனிதனே
ஓதுவது மட்டும்தான் ஐயரின் வேலை
ஓருயிரை காப்பாற்றுவதோ இறைவனின் லீலை
ஓர் இறைவனாய் மருத்துவரைப் பார்க்காதே!
ஓருயிர் பிரிந்தால் மருத்துவரைத் தாக்காதே!!
No comments:
Post a Comment