Thursday 2 February 2012

uyir aasan

                       உயிர் ஆசான்

அன்னைக்கும் தந்தைக்கும் அடுத்ததாய் சொன்னாலும்
அறிவினைத் தருவதில் முதனிலைதான் எந்நாளும்
அளவில்லா அறிவினை நமக்கு ஊட்டுவதும்
அறிவுக்கண் திறந்து நல்வழி காட்டுவதும்

ஆழமான கல்வி தரும் ஆசிரியரே

ஆமோதிக்க மறுத்தால் வரும் பெருந்துயரே
ஆளாக்குவதில் இவரும் பங்கு கொள்வார்
ஆளுமைத் திறனுக்கு அடித்தளம் வைப்பார்

இன்று பயில்வது என்றுமே உதவும்

இடித்தால் திறக்கும் இறுகிய கதவும்
இறுகிய கதவாய் இருக்கும் நமறிவை
இடிக்கத்தான் நல்ல ஆசிரியர் தேவை

ஈரமண் தண்ணீரால் பக்குவம் அடைந்திடும்

ஈர்க்கும் ஆசிரியரால் அறிவுமண் நனைந்திடும்
ஈர்க்கும் உருவங்களை ஈரமண் பெற்றிடும்
ஈரமான அறிவுமண்ணும் அவ்வாறே சிறந்திடும்

உறவுகள் கூட உதவாத சமயம்

உதவிடும் கல்வியோ உயரத்தில் இமயம்
உன்னத கல்வியை உனக்கு கொடுப்பார்
உறங்கும் அறிவின் தூக்கத்தைக் கெடுப்பார்

ஊக்கத்துடன் கற்பிக்கும் ஆசானை பெற்றிடு

ஊரே வியக்கும் கல்வியை கற்றிடு
ஊஞ்சலாய் ஆடும் மனதினை மாற்றிடு
ஊரே வியந்திடும் உயரத்தில் ஏறிடு

எல்லா துறையிலும் அவசியம் தேவை

எல்லா காலத்திலும் செய்திடும் சேவை
எந்த பொருளும் கல்வியின்றி அமையாது
எண்ணிப்பார் ஆசானின்றி கல்வியே இருக்காது

ஏளனம் செய்யாதே கல்வியை விற்று

ஏனிந்த நிலையென நீயோசி சற்று
ஏழைகளும் கல்விபெற்று முன்னேற வேண்டும்
ஏற்றிவிட இரக்கங்கொண்ட நல்லாசான் வேண்டும்

ஐயங்களைத் தீர்த்து அறிவுதரும் குருவே

ஐயமில்லை அவனே இறைவனின் உருவே
ஐம்புலன்களை அடக்கும் புத்தியும் தருவான்
ஐம்பூதங்களை கடக்கும் சித்தியும் தருவான்

ஒன்றும் இல்லாதோருக்கு எல்லாம் தரும்

ஒன்றன்பின் ஒன்றாக எல்லாம் வரும்
ஒருவர் பெரும் கல்வி அறிவு
ஒருபிறவி முழுதும் தரும் செறிவு

ஓடமாயிருந்து நம்மை சேர்ப்பார் கரை

ஓயமாட்டார் ஒன்றை கற்பிக்கும் வரை
ஓங்கிய கல்விக்கு எல்லையே இல்லை
ஓர் ஆசானில்லையேல் அக்கல்வியே இல்லை.

                  

No comments:

Post a Comment