உயிர் ஆசான்
அன்னைக்கும் தந்தைக்கும் அடுத்ததாய் சொன்னாலும்
அறிவினைத் தருவதில் முதனிலைதான் எந்நாளும்
அளவில்லா அறிவினை நமக்கு ஊட்டுவதும்
அறிவுக்கண் திறந்து நல்வழி காட்டுவதும்
ஆழமான கல்வி தரும் ஆசிரியரே
ஆமோதிக்க மறுத்தால் வரும் பெருந்துயரே
ஆளாக்குவதில் இவரும் பங்கு கொள்வார்
ஆளுமைத் திறனுக்கு அடித்தளம் வைப்பார்
இன்று பயில்வது என்றுமே உதவும்
இடித்தால் திறக்கும் இறுகிய கதவும்
இறுகிய கதவாய் இருக்கும் நமறிவை
இடிக்கத்தான் நல்ல ஆசிரியர் தேவை
ஈரமண் தண்ணீரால் பக்குவம் அடைந்திடும்
ஈர்க்கும் ஆசிரியரால் அறிவுமண் நனைந்திடும்
ஈர்க்கும் உருவங்களை ஈரமண் பெற்றிடும்
ஈரமான அறிவுமண்ணும் அவ்வாறே சிறந்திடும்
உறவுகள் கூட உதவாத சமயம்
உதவிடும் கல்வியோ உயரத்தில் இமயம்
உன்னத கல்வியை உனக்கு கொடுப்பார்
உறங்கும் அறிவின் தூக்கத்தைக் கெடுப்பார்
ஊக்கத்துடன் கற்பிக்கும் ஆசானை பெற்றிடு
ஊரே வியக்கும் கல்வியை கற்றிடு
ஊஞ்சலாய் ஆடும் மனதினை மாற்றிடு
ஊரே வியந்திடும் உயரத்தில் ஏறிடு
எல்லா துறையிலும் அவசியம் தேவை
எல்லா காலத்திலும் செய்திடும் சேவை
எந்த பொருளும் கல்வியின்றி அமையாது
எண்ணிப்பார் ஆசானின்றி கல்வியே இருக்காது
ஏளனம் செய்யாதே கல்வியை விற்று
ஏனிந்த நிலையென நீயோசி சற்று
ஏழைகளும் கல்விபெற்று முன்னேற வேண்டும்
ஏற்றிவிட இரக்கங்கொண்ட நல்லாசான் வேண்டும்
ஐயங்களைத் தீர்த்து அறிவுதரும் குருவே
ஐயமில்லை அவனே இறைவனின் உருவே
ஐம்புலன்களை அடக்கும் புத்தியும் தருவான்
ஐம்பூதங்களை கடக்கும் சித்தியும் தருவான்
ஒன்றும் இல்லாதோருக்கு எல்லாம் தரும்
ஒன்றன்பின் ஒன்றாக எல்லாம் வரும்
ஒருவர் பெரும் கல்வி அறிவு
ஒருபிறவி முழுதும் தரும் செறிவு
ஓடமாயிருந்து நம்மை சேர்ப்பார் கரை
ஓயமாட்டார் ஒன்றை கற்பிக்கும் வரை
ஓங்கிய கல்விக்கு எல்லையே இல்லை
ஓர் ஆசானில்லையேல் அக்கல்வியே இல்லை.
No comments:
Post a Comment