Thursday 2 February 2012

uyir thandhai

                          உயிர் தந்தை 

அன்பிற்கு அன்னையெனில் அறிவிற்கு தந்தை
அனுபவ அறிவைத் தருவதில் சந்தை
அனலாய் கொதித்து மகனைத் திட்டுவார்
அதேநேரம் அளவில்லா அன்பினை காட்டுவார்

ஆதம் தொடங்கிய அழகிய உறவு

ஆழம் மிகுந்த அற்புத உணர்வு
ஆளாக்குவதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு
ஆதவனே வியக்கும் அச்செயல் கண்டு

இரவும் பகலும் அயராது உழைப்பதும்

இல்லை என்று கூறாது கொடுப்பதும்
இனிய தந்தையின் சிறந்த குணம்
இமயம் போல் உயர்ந்த மனம்

ஈரைந்து மாதங்கள் சுமக்கவில்லை என்றாலும்

ஈன்ற பிள்ளையை சுமப்பார் மனதில் எந்நாளும்
ஈர நெஞ்சமும் இறக்க குணமும்
ஈன்ற பிள்ளைக்குத் தந்தை தரும் வரமாம்.

உலகத்துக்கே தந்தை ஒளிதரும் ஆதவன்

உனக்கும் எனக்கும் நம்தந்தையே ஆதவன்
உன்னை காக்கும் உயர்ந்த சுவரே
உழைப்பையும் உயர்வையும் கற்பித்த அவரே

ஊக்கத்தையும் கொடுத்து உணவையும் கொடுத்து

ஊரே வியக்கும் கல்வியும் கொடுத்து
ஊருக்கே சொல்லி பெருமை படுவார்
ஊமை கூட உன்புகழ் பாடும்படி செய்வார்


எல்லா தேர்விலும் எளிதாம் வினாத்தாள்
எதிரே தந்தையின் உந்துதல் இருந்தால்
எதையும் ஆழமாக சிந்துத்துப் பார்ப்பார்
எல்லா பிரச்சனைகளையும் சந்தித்துத் தீர்ப்பார்

ஏணியாய் முன்னேற வைத்திடுவார் நம்மை

ஏமாற்றம் தாராமல் செய்திடுவார் நன்மை
ஏற்றிவிட்ட தந்தையின் ஆசியே போதும்
ஏற்பட்ட துன்பங்கள் தூசியாய் போகும்

ஐம்பதை தாண்டியும் ஓய்வு பெறாமல்

ஐம்புலனுக்கும் முழு இன்பம் தராமல்
ஐவர் குடும்பத்தில் உழைக்கும் ஒருவன்
ஐயமில்லை அவனே நமக்கு இறைவன்

ஒருவர் வாழ்வில் ஒளிமயம் ஆக

ஒருமுறை தந்தை பதவியை பெருக
ஒத்துக்கொள்வாய் அது மிக பெரிது
ஒருமுறை மட்டும் பெற்றால் நல்லது

ஓய்வுக்குப் பின்னும் ஓயாத சிந்தை

ஓரங்கட்டாதே அறிவில் தேயாத தந்தை
ஓதும் மந்திரம் எல்லாம் வீணாகிபோகும்
ஓர் தந்தையின் சொல்லே மந்திரமாகும்.

No comments:

Post a Comment